மேலும் பல அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா வரும்- ஏழாவது கப்பற் படையணி தளபதி
அமெரிக்கக் கடற்படையின் மேலும் பல கப்பல்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கட்டளைக் கப்பல் கடந்த மாதம் 26ஆம் நாள் தொடக்கம் 31ஆம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டிருந்தது.
இதன் போது, அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் அதிகாரிகளுக்கும், சிறிலங்கா கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகளுக்கும் இடையில் யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கப்பலில், பேச்சுக்கள் நடத்தப்பட்டன.
அமெரிக்க- சிறிலங்கா படைகளுக்கிடையில் நடத்தப்பட்ட முதலாவது அதிகாரிகள் மட்டப் பேச்சுக்களின் போதே, ஏழாவது கப்பற் படையணியின் கட்டளை அதிகாரியான வைஸ் அட்மிரல் ஜோசப் ஓகொயின் இவ்வாறு தெரிவித்தார்.
“நாம் இங்கு மீண்டும் வர விரும்புகிறோம். ஏழாவது கப்பற் படையணியின் மேலும் கப்பல்களை கொண்டு வர விரும்புகிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 29ஆம் நாள் நடந்த இந்தக் கலந்துரையாடலில், சிறிலங்கா விமானப்படை, கடற்படையைச் சேர்ந்த 16 அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, அமெரிக்க- சிறிலங்கா படையினருக்கான இருதரப்பு பயிற்சி வாய்ப்புகள் குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் நாள் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் கப்பல், நேற்று இந்தியாவில் மும்பைத் துறைமுகத்தைச் சென்றடைந்துள்ளது.