சாவகச்சேரியில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் மீட்பு – கிளம்பும் சந்தேகங்கள்
சாவகச்சேரி – மறவன்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதலுக்கான அங்கி, மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சாவகச்சேரி வல்லகுளம் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து, நேற்றிரவு தேடுதல் நடத்தப்பட்டது.
தேடுதலுக்காக காவல்துறையினர் சென்ற போது அந்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த வீட்டில் இருந்து தற்கொலைத் தாக்குதல் அங்கி ஒன்றும், மூன்று கிளைமோர் குண்டுகளும், மூன்று பொதிகளாகச் சுற்றப்பட்ட நிலையில், 12 கிலோ சி-4 வெடிபொருளும், கிளைமோர்களுக்கான இரண்டு பொதி பற்றரிகளும், 9 மி.மீ ரவைகள் 100 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்கொலைத் தாக்குதல் அங்கி மற்றும், வெடிபொருள்கள் மீட்கப்பட்ட வீட்டில் தங்கியிருந்த இளைஞர் தப்பி விட்டதாக கூறப்படுகிறது. அவரது மனைவியும், தந்தையும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த வெடிபொருள்கள் சிங்கள நாளிதழ் ஒன்றினால் சுற்றப்பட்டிருப்பதும், திருகோணமலையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் பொலித்தீன் பை பயன்படுத்தப்பட்டிருப்பதும், சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏதுமில்லை என்று யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியிருந்த நிலையில், வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது.