தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம்
மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இன்று இடைநிறுத்த முடிவு செய்துள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம் அளித்த வாக்குறுதியை அடுத்தே, அரசியல் கைதிகள் தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர்.
தமது விடுதலையை வலியுறுத்தி மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 14 அரசியல் கைதிகள் இரண்டு வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இன்று இவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 14 பேருக்கு எதிராகவும், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, இவர்களை எதிர்வரும் 23ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அரசியல் கைதிகள் 14 பேரும், உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அரசியல் கைதிகள் கோரி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அவர்களை விடுவிக்கக் கோரியும், யாழ். பல்கலைக்கழ மாணவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.