அமெரிக்காவின் 100 மில். டொலர் புத்தாயிரமாண்டு சவால் நிதியுதவி – சிறிலங்காவுடன் பேச்சு
சிறிலங்காவுக்கு புத்தாயிரமாண்டு சவால் நிதியத்தின் ஊடாக, 100 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவது தொடர்பாக, சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிறிலங்கா நிதியமைச்சில் நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேச்சுக்களில், புத்தாயிரமாண்டு சவால் நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜேம்ஸ் ஏ கிராட், மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளும், சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தலைமையிலான குழுவினரும் பங்கேற்றனர்.
சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப்பும் இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டார்.
இந்த புத்தாயிரமாண்டு சவால் நிதியத்தின் ஊடாக சிறிலங்காவுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் 50 தொடக்கம் 100 மில்லியன் டொலர் வரையான நிதியை, எந்தெந்த துறைகளுக்குச் செலவிடுவது என்பது குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமெரிக்க குழுவினர் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்தக் குழுவினர் வரும் டிசெம்பர் மாதம் மீண்டும் சிறிலங்கா வந்து, கலந்துரையாடல்களை நடத்திய பின்னரே, 2017ஆம் ஆண்டுக்கான இந்த நிதியுதவியை வழங்குவதற்கான முடிவுகளை எடுப்பர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.