மேலும்

அரசியலமைப்பு திருத்தம் குறித்து மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனுடன் சந்திப்பு

sam-meetஅரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழு நேற்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்  தசியக் கூட்டமைப்பின் தலைவருமான  இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியது.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதிய அரசியலமைப்பு ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என்ற விடயத்தை எடுத்துக்கூறிய இந்தக் குழுவினர், மக்களின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்ததாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதேவேளை, பிரச்சினைகளை அரசியலமைப்பு ஊடாக தீர்த்துக் கொள்வது அவ்வளவு சிரமமாக இருக்காது என்று, எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் போது தெரியவந்ததாக லால் விஜயநாயக்க கூறினார்.

sam-meet

“பிரச்சினைகளை மிகவும் நியாய பூர்வமான வழியில் தீர்த்துக் கொள்ள முடியும். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து குறிப்பாக யோசனைகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

எல்லாமக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஆக்கபூர்வமான கருத்துக்களை அவர் முன்வைத்திருந்தார்.

கடந்த காலங்களில் அரசியலமைப்பின் கீழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திருக்கவில்லை.

அரசு ஜனநாயகத்தை ஏற்படுத்தும் மிகவும் பலமான- அதேபோல், இனங்களுக்கு இடையில் அந்நியோன்யத்தை ஏற்படுத்தி தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் அரசியலமைப்பு ஒன்றையே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இன்று பிரதமரையும் எதிர்வரும் 15ஆம் நாள் சிறிலங்கா அதிபரையும் சந்திக்கவிருக்கிறோம்.

இறுதி அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதியில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்தமாத இறுதியில் கருத்துக்களை சேகரிக்கும் பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன. அதன் பின்னர் அறிக்கை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்.

மக்களிடம் பெறப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கி எமது பரிந்துரைகளும் முன்வைக்கப்படும்.

அரசியலமைப்பு பிரச்சினையை விடவும் மக்கள் மத்தியில் ஆழமான பிரச்சினைகள் இருப்பதை மக்களிடம் கருத்தறிய செல்லும் போது எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வளவு சிறந்த அரசியலமைப்பை உருவாக்கியும் சில நேரங்களில் அதனால் மக்களுக்கு பலன் கிடைக்காது என்பதை எம்மால் உணர முடிந்தது.

நாடு முழுவதிலும் நடத்திய அமர்வுகளில் சுமார் 2 ஆயிரம் பேர் எமது குழுவின் முன்னிலையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தனிநபர்களாக அன்றி அமைப்புக்களாகவே கருத்துக்களை சமர்ப்பித்துள்ளனர்.

இதனைவிட எழுத்துமூலம் சுமார் ஆயிரம் பரிந்துரைகளும் கிடைத்துள்ளன. மொத்தமாக சுமார் 5 ஆயிரம் பரிந்துரைகள் கிடைத்திருக்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *