15 மாதங்களாகியும் அதிகாரிகளை விட்டுப்போகாத மகிந்த பக்தி
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 15 மாதங்களாகின்ற நிலையில், கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் வரவேற்புரை நிகழ்த்திய விவசாய அமைச்சின் செயலாளர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச என்று விழித்தது நிகழ்வில் பங்கேற்றவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில், இன்று காலை தேசிய கண்காட்சி நிகழ்வு ஒன்று ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் வரவேற்புரையாற்றிய விவசாய அமைச்சின் செயலர் பி.விஜேரத்ன, “சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்களே..” என்று வழித்து உரையாற்றினார்.
அவ்வாறு கூறியதையடுத்து, பின்புறம் இருந்த அதிகாரிகள் தவறைச் சுட்டிக்காட்டியதையடுத்து, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவர்களே… என்று தனது தவறைத் திருத்திக் கொண்டார்.