அமெரிக்க காங்கிரஸ் வெளிவிவகாரக் குழுத் தலைவருடன் மங்கள சமரவீர பேச்சு
அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரும், அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவருமான, எட் ரோய்சுடன் மங்கள சமரவீர நடத்திய பேச்சுக்களில், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மங்கள சமரவீர விபரித்துக் கூறியுள்ளார்.
அத்துடன், சிறிலங்காவின் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் அபிவிருத்திக்கு அமெரிக்க உதவவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருக்கிறார்.
2016-2017ஆம் நிதியாண்டில்,சிறிலங்காவுக்கு 31 மில்லியன் டொலர் (சுமார் 4350 மில்லியன் ரூபா) நிதியுதவிகளை வழங்க அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவிடம் பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.