இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை
இந்தோனேசியாவின் சுமாத்ரா கடலில் இன்று மாலை ஏற்பட்ட 7.9 அளவுடைய பாரிய நிலநடுக்கத்தினால், சிறிலங்காவில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்குக் கரையில் உள்ள படாங் நகரில் இருந்து தென்மேற்குத் திசையில் 808 கி.மீ தொலைவில் உள்ள கடற்பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி 7.49 மணியளவில் ( ஜி.எம்.ரி நேரம் 12.49) ரிச்டர் அளவுகோலில் 7.9 எனப் பதிவான இந்த நிலநடுக்கத்தை அடுத்து இந்தோனேசியாவில் மேற்கு மற்றும் வடக்கு சுமாத்ரா, ஆசே உள்ளிட்ட பல பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவும் கொகோஸ் தீவு உள்ளிட்ட சில பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தை அடுத்து, பல்வேறு நாடுகளும் சுனாமி ஏற்படுமா என்று உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
இந்த நிலையில், சிறிலங்காவில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
ஏனைய அயல் நாடுகளுடன் இதுதொடர்பாக சிறிலங்கா தொடர்பு கொண்டுள்ளதாகவும், எனினும் தெற்காசியப் பிராந்தியத்துக்கு ஆபத்து ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சுனாமி எச்சரிக்கைகள் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சற்று முன்னர் அறிவி்த்துள்ளது.