செய்தி இணையத்தளங்களை பதிவு செய்ய சிறிலங்கா அறிவுறுத்தல்- ஊடக சுதந்திரம் கேள்விக்குறி
அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா ஊடகத்துறை அமைச்சினால் இன்று டெய்லி நியூஸ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் ஒன்றில், வரும் மார்ச் 31ஆம் நாளுக்கு முன்னதாக செய்தி இணையத்தளங்கள் ஊடகத்துறை அமைச்சின் கீழ் பதிவு செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இதன்மூலம், அனைத்து செய்தி இணையத்தளங்களும் எந்தவொரு குறுக்கீடும் இல்லாமல் நெறிமுறைக்கமைய அங்கீகாரத்தை பெற்று செயற்பட முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் நாளுக்குள் பதிவு செய்து கொள்ளத் தவறும் இணையத்தளங்கள் சட்டரீதியற்ற இணையத்தளங்கள் என்று கருத்தில் கொள்ளப்படும் என்றும் அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஊடகத்துறை அமைச்சின் இணையத்தளத்தில் இந்தப் பதிவுக்கான விண்ணப்பமும் இணைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த தற்போதைய அரசாங்கம், அதனை மீறும் வகையில் செயற்பட முனைவதாகவும், ஊடகங்களை நசுக்க முனைவதாகவும் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன.