பாரத லக்ஸ்மன் கொலை சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான தெமட்டகொட சமிந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இன்று பிற்பகல் 4.15 மணியளவில் தெமட்டகொட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் சந்தேக நபரான தெமட்டகொட சமிந்தவை ஏற்றிச் சென்ற சிறைச்சாலை வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட நான்கு கைதிகள் காயமடைந்தனர்.
பாரத லக்ஸ்மன் கொலை வழக்கின் சந்தேகநபரான தெமட்டகொட சமிந்த படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகராக இருந்த- நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தந்தையான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர, 2011 உள்ளூராட்சித் தேர்தலின் போது, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
அந்தச் சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் படுகாயமடைந்தார். அவரும் இந்தக் கொலையில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.