சிறிலங்காவுக்கான நிதியுதவியை அதிகரிக்கிறது ஆசிய அபிவிருத்தி வங்கி
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக சிறிலங்காவுக்கு வழங்கும் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, ஒரு பில்லியன் டொலரை சிறிலங்காவுக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வொன்- மொக் சோய் இற்கும் இடையில் நடந்த பேச்சுக்களின் போதே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், குடிநீர் விநியோகத் திட்டங்கள், நீர்ப்பாசனம் மற்றும், சிறிய, நடுத்தர வர்த்தகம் ஆகியவற்றுக்கே இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது.
1960ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்காவுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவிகளை வழங்கி வருகிறது. எனினும், 2017ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள, ஒரு பில்லியன் டொலரே சிறிலங்கா பெறுகின்ற அதிகபட்ச நிதியுதவியாகும்.
இதுவரை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆண்டு தோறும் 500 தொடக்கம் 700 மில்லியன் டொலரை மாத்திரமே வழங்கி வந்தது.