சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் மாலைதீவு முன்னாள் அதிபர்
சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால், பிரித்தானியாவில் மருத்துவ சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ள மாலைதீவு முன்னாள் அதிபர் முகமட் நசீட், லண்டன் செல்லும் வழியில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை கொழும்பில் சந்தித்துள்ளார்.
மாலைதீவு நீதிமன்றத்தினால் 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் முகமட் நசீட் சத்திர சிகிச்சை செய்து கொள்வதற்கு பிரித்தானியா சென்று வர மாலைதீவு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.
நாடு திரும்பி மீண்டும் எஞ்சிய சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நசீட் லண்டன் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சியினாலேயே இது சாத்தியமாகியுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர், கடந்த வாரம் மாலைதீவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டு அரசாங்கத் தலைவர்களை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாகவே, சிறையில் இருந்த முன்னாள் அதிபர் நசீட் விடுவிக்கப்பட்டு பிரித்தானியா செல்ல அனுமதிக்கப்பட்டார்.
நேற்று பிற்பகல் அவர் பிரித்தானியா செல்வதற்காக மாலே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொழும்பு வந்தார்.
மாலே விமான நிலையத்தில் இருந்து அவர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
அதையடுத்து, கொழும்பு வந்த, நசீட், லண்டன் புறப்பட முன்னர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது விடுதலைக்காக மேற்கொண்ட முயற்சிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.