மேலும்

தைப்பொங்கலுடன் முடிவுக்கு வந்த பனிப்போர்

ranil-cm-pongal (3)சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும், ஒருவருக்கொருவர் முகம்கொடுக்காத- கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பனிப்போர், நேற்று முடிவுக்கு வந்தது.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேசிய பொங்கல் விழா நிகழ்வில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிகழ்வுக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, வீரசிங்கம் மண்டபத்தின் வாயிலில் கைலாகு கொடுத்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி,  தலைப்பாகை சூடி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து, விழாவில் அவர்கள் இருவரும் அருகருகாக ஆசனங்களில் அமர்ந்திருந்ததுடன், விழா முடியும் வரையில் நீண்டநேரமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

ranil-cm-pongal (1)ranil-cm-pongal (3)ranil-cm-pongal (6)

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அருகே, சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டு, அதில் அவரது பெயரிடப்பட்ட அட்டை தொங்கவிடப்பட்டிருந்தது.

எனினும், ரணிலுக்கு அருகில் இருந்த அந்த ஆசனத்தில் முதலமைச்சர் அமர்ந்திருந்து, பேசிக் கொண்டிருந்தார். இதனால் முதலமைச்சருக்கு அடுத்த ஆசனத்தில் சந்திரிகா அமர்ந்து கொண்டார்.

வடக்கில் இருந்து படையினரை வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் வெளியிட்ட கருத்துக்களால் கடந்த ஆண்டு முற்பகுதியில் இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன.

ஒரு கட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை பொய் பேசுபவர் என்று ரணில் செவ்வி அளித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் தமக்குச் சார்பாக கூட்டமைப்பின் தலைவர்கள் கருத்து வெளியிடவில்லை என்ற விசனம் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்டதன் விளைவாக, கூட்டமைப்புத் தலைவர்களுக்கும் அவருக்கும் இடையில் விரிசல்கள் ஏற்பட்டன.

அதேவேளை, கருத்து முரண்பாடுகளுக்குப் பின்னர், வளலாயில் காணிகளை விடுவிக்கும் நிகழ்வில், விக்னேஸ்வரனும், ரணிலும் பங்கேற்றிருந்த போதும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை.

இதற்குப் பின்னர், தாம், முதலமைச்சருடன் பேசப் போவதில்லை என்று ரணில் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்குப் பின்னர், ரணிலுக்கும், விக்னேஸ்வரனுக்கும் இடையில் பனிப்போர் நிலை காணப்பட்டது. இந்த நிலைமை நேற்றைய பொங்கல் விழாவில் முடிவுக்கு வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *