விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்திய நோர்வே – உபுல் ஜோசப் பெர்னான்டோ
சமாதான செயற்பாடுகளுக்கான அனுசரணையாளராக நோர்வே சிறிலங்காவிற்கு வருகை தராதுவிட்டிருந்தால், விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். வடக்கு கிழக்கில் தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். இவ்வாறானதொரு ஆபத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் தடுத்து நிறுத்தியது.
இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.
அண்மையில் நோர்வே வெளியுறவு அமைச்சர் மேற்கொண்டிருந்த சிறிலங்காவிற்கான சுற்றுப்பயணத்தை தமக்கான அரசியல் இலாபமாக்குவதற்கு தென்னிலங்கையிலுள்ள சில இனவாதிகள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
இந்த இனவாதிகள் 2004-2005ல் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு நோர்வே எதிர்ப்பு சுலோகங்களைப் பயன்படுத்தியிருந்தனர். 2000ல் அப்போதைய ஆட்சியாளர் சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தால் நாட்டில் சமாதான முயற்சிகளை மேற்கொள்வதற்கான அனுசரணையாளராகச் செயற்படுமாறு நோர்வேக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், 2002ல் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நோர்வே எதிர்ப்புப் பரப்புரைக்கு சந்திரிகா தனது ஆதரவை வழங்கினார். 2002ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச சிறிலங்காவின் சமாதானச் செயற்பாடுகளுக்கு அனுசரணையாளராக இருந்த நோர்வேயுடன் நெருக்கமான உறவுகளைப் பேணியிருந்தார். ஆனால் 2005ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், மகிந்த நோர்வே தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
இதன்பின்னர் இதே ஆண்டில் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தனது வலையில் விழுத்தும் முயற்சியில் நோர்வேயுடன் நட்பைப் பேண மகிந்த முயற்சித்தார். நோர்வேயின் சமாதான விவகாரங்கள் என்கின்ற தலைப்பில் எழுதப்பட்ட மார்க் ஸ்லேற்றரின் நூல் வெளியீட்டின் போது நோர்வேயின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் எரிக் சொல்கெய்ம் இந்த உண்மையை வெளியிட்டிருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் தேர்தல் நடத்தி ஆட்சி அமைக்காது பிரபாகரனுக்கு சுயாட்சி வழங்குவதற்கு மகிந்த தயாராக இருந்ததாக சொல்கெய்ம் தெரிவித்திருந்தார்.
சொல்கெய்ம் நூல் வெளியீட்டின் போது வெளியிட்ட உண்மைகள் வருமாறு:
‘வடக்கு கிழக்கில் பிரபாகரனைத் தலைவராக்குவதற்கான முயற்சிகளை ராஜபக்ச பின்கதவு வழியாக மேற்கொண்டிருந்தார். ராஜபக்ச, சிங்களவர்களின் ‘சிறந்த இரட்சகராகத்’ தன்னைத் தானே சித்தரித்துக் கொண்டார். ஆனால் இவர் தனது அரசியல் நிலைப்பிற்காக எந்தவொரு கெட்ட நடவடிக்கையிலும் ஈடுபடத் தயாராக இருந்தார் என்பதே உண்மையாகும்’ என சொல்கெய்ம் குறிப்பிட்டார்.
நோர்வேயின் பேரம் பேசலை பிரபாகரன் மறுத்ததன் பின்னர் மகிந்த நோர்வேயை எதிர்க்கத் தொடங்கினார். பௌத்த சிங்களவர்களின் வாக்குகளை வென்றெடுப்பதற்காக இறுதி அதிபர் தேர்தலில் மகிந்த, நோர்வேயை விமர்சித்திருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொல்கெய்ம் நிதியுதவி வழங்கியதாக மகிந்த தனது தேர்தல் பரப்புரையில் தெரிவித்திருந்தார். எனினும் மகிந்தவின் இத்தகைய பொய்ப் பரப்புரையானது இவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எவ்விதத்திலும் உதவவில்லை.
நோர்வே வெளிவிவகார அமைச்சரின் சிறிலங்காவிற்கான அண்மைய பயணத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் தேடலாம் என தென்னிலங்கைஇனவாதிகள் கருதிய போதும், நாட்டிற்குள்ளே நோர்வேயை எதிர்க்கக் கூடிய ஆதரவாளர்களை இவர்களால் திரட்ட முடியவில்லை.
நோர்வே எதிர்ப்பு சுலோகங்கள் சிறிலங்காவைப் பொறுத்தளவில் காலாவதியாகி விட்டன. இதுவே தென்னிலங்கையில் செயற்படும் இனவாதிகளின் தோல்விக்குக் காரணமாகும். இவ்வாறான தகுதியற்ற தந்திரோபாயங்கள் மக்களுக்கு பரிச்சயமாகி விட்டன.
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம்:
திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் நோர்வே சிறிலங்காவுடனான தனது உறவை ஆரம்பித்தது. 1970ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் நிதி அமைச்சராக கலாநிதி என்.எம்.பெரேரா பதவி வகித்த போது சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி நிலவியது. என்.எம்.பெரேரா சமவுடைமைவாதக் கோட்பாடுகளையே பின்பற்றினார்.
இதனால் அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புக்கள் சிறிலங்காவிற்கு உதவுவதில் தயக்கம் காண்பித்தன. இக்காலப்பகுதியிலேயே திருமதி.பண்டாரநாயக்க, நோர்வேயுடனான உறவை ஆரம்பித்தார். பொருளாதார உதவியைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இவர் நோர்வேக்கு பயணம் செய்தார்.
நோர்வேக்குப் பயணம் செய்த திருமதி.பண்டாரநாயக்கவை மதிப்பளித்து அப்போதைய ஒழுங்குபடுத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வில் நோர்வேப் பிரதமர் உரையாற்றியிருந்தார்.
‘சிறிலங்காப் பிரதமர் முதற் தடவையாக எமது நாட்டிற்கு வருகை தந்துள்ளதானது எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிலங்காப் பிரதமர் அவர்களே, நீங்கள் எமது நாட்டிற்கு வருகை தந்துள்ளமைக்கு நாம் மதிப்பளிக்கிறோம். தங்களது சிறந்த கணவரின் தலைமையின் கீழும், அம்மணியாகிய தங்களது தலைமைத்துவத்தின் கீழும் உள்ள சிறிலங்கா தனக்கென தனியிடத்தைப் பிடித்துள்ளது. அபிவிருத்தி அடைந்து வரும் பெரும்பாலான நாடுகள் சந்திக்கின்ற அதே பிரச்சினைகளையே தங்களது நாடும் சந்தித்துள்ளது.
பல அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை நீங்கள் தங்களது கோட்பாடுகளின் ஊடாக முன்னெடுத்துள்ளமையானது பாராட்டத்தக்க விடயமாகும். நில சீர்திருத்தம், பொதுக் கல்வியை வழங்குதல், பொருளாதாரத் துறையின் முக்கிய விடயங்களில் தேசிய கட்டுப்பாட்டை விதித்தல், குடும்பத் திட்டத்திற்கு முக்கியமான பொது சுகாதாரத் திட்டங்கள் போன்றவற்றை தாங்கள் தங்களது நாட்டில் விரிவுபடுத்தியுள்ளதை நாம் வரவேற்கிறோம்’ என சிறிமாவோ பண்டாரநாயக்கவிடம் நோர்வேயின் அப்போதைய பிரதமர் எடுத்துக் கூறியிருந்தார்.
அவர் மேலும் தனது உரையில் ‘சிறிலங்கா அதன் சமவலு மற்றும் அறிவுத் திறனுடன் கூடிய அனைத்துலக விவகாரங்களைக் கையாளுவதை இந்த உலகம் நன்கறியும். உலகின் புதிய பொருளாதார ஒழுங்கிற்கான நிபந்தனையற்ற உரிமைக் கோரல்களுக்குத் தன்னை விட்டுக் கொடுக்காது, உலக நாடுகளுடன் தொடர்ச்சியான சமரசங்களைப் பேணுவதை சிறிலங்கா உறுதிப்படுத்துகிறது. அணிசேரா நாடுகளின் குழுவிற்கு நீங்கள் தலைமை தாங்கும் முறைமைக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இதன்மூலம் நீங்கள் உங்களது நாட்டினதும் அதேவேளையில் அணிசேரா நாடுகளின் அமைப்பினதும் மதிப்பை மேலும் உயர்த்துவதற்கு உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள்.
நோர்வே அரசாங்கமானது அபிவிருத்தியடைந்து வரும் உலகிற்கு நிதி சார் உதவிகளை வழங்க வேண்டிய அளப்பரிய சேவையை மேற்கொள்கிறது. அத்துடன் மிகவும் அவசரமாகத் தேவைப்படும் உலக நாடுகளின் பொருளாதாரத்தை அடையாளங்கண்டு அவற்றிற்கு உதவ வேண்டிய புதிய பொருளாதாரக் கட்டளையையும் நோர்வே கொண்டுள்ளது’ எனக் குறிப்பிட்டார்.
சீநோர் (CeyNor) நிறுவனம்:
சிறிலங்காவில் மீன்வளத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் திருமதி.பண்டாரநாயக்கவால் சீநோர் நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதற்கட்ட திட்டமானது அம்பாந்தோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இத்திட்டம் முதலாவதாக அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டது.
அம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தைத் தானே அறிமுகம் செய்ததாக அப்போது மகிந்த ராஜபக்ச பெருமையுடன் அறிவித்தார். 1994ல் மகிந்த சிறிலங்காவின் மீள்வளத்துறை அமைச்சராக பதவிவகித்த போது சீநோர் நிறுவனம் தொடர்ந்தும் மகிந்தவிற்கு உதவியது. சந்திரிக்கா குமாரதுங்கவின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட நோர்வே சிறிலங்காவில் 2000 இலிருந்து சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகக் கொடிய தாக்குதல்களிலிருந்து விடுபடுவதற்காகவே சந்திரிக்காவால் சமாதான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. 2000ம் ஆண்டு நோர்வே சமாதானக் குழு சிறிலங்காவை வந்தடைந்த போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டிருந்து இராணுவ நிலைகள் பலவற்றைத் தகர்த்தெறிந்ததுடன் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலை அண்மித்திருந்தது.
சமாதான செயற்பாடுகளுக்கான அனுசரணையாளராக நோர்வே சிறிலங்காவிற்கு வருகை தராதுவிட்டிருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியிருப்பார்கள். அத்துடன் வடக்கு கிழக்கில் தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருப்பார்கள். இவ்வாறானதொரு ஆபத்தை நோர்வேயின் சமாதான முயற்சிகள் தடுத்து நிறுத்தியது.
உண்மையில் நோர்வேயின் சமாதான மத்தியஸ்தமானது தமிழீழ விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியது. புலிகள் மீது மகிந்த அரசாங்கம் மூர்க்கமான தாக்குதல்களை மேற்கொண்டு அதனைப் பலவீனப்படுத்திய போது, புலிகள் அமைப்பு நோர்வேயிடம் உதவி செய்யுமாறு கோரியது. ஆனால் இதனை மகிந்த அனுமதிக்கவில்லை. வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைய முற்பட்ட புலி உறுப்பினர்களை நோர்வே காப்பாற்ற முற்பட்ட போது அதனைக் கூட மகிந்த அனுமதிக்கவில்லை.
புலிகள் அமைப்பானது தான் விட்ட தவறாலேயே அழிவடைந்ததாக நோர்வே அறிவித்தது. இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பினும் கூட, நோர்வேயின் சமாதான அனுசரணையே புலிகள் பலவீனமுறுவதற்குக் காரணமாக அமைந்தது என்கின்ற உண்மையை நோர்வே ஏற்றுக்கொள்ளுமா என்பது எமக்குத் தெரியாது.
2000ம் ஆண்டில் சிறிலங்கா அரசாங்கமானது பலவீனமுற்றிருந்த போது அதற்கு உதவுவதற்காகவே நோர்வே சிறிலங்காவில் சமாதானப் பணியை மேற்கொள்ள வந்தபோதிலும் புலிகள் அமைப்பு பலவீனமுற்றிருந்த போது நோர்வே தனது அனுசரணை மூலம் போர்நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள முனையவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
எவ்வாறெனினும், இதற்குப் பரிகாரம் தேட கடந்த வாரம் நோர்வே வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவிற்கான தனது பயணத்தை மேற்கொள்ளவில்லை.
இவர் நோர்வேயின் பொருளாதார உறவைப் பலப்படுத்தவே சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். நோர்வே வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவில் தங்கியிருந்த காலப்பகுதியில் இவரால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
இது உண்மையான கருத்து, புலிகளின் பல தவறான ராஜதந்திரம் அவர்களின் முக்கிய உறுப்பினர்களை வெகு விரைவில் சர்வதேசம் விலைக்கு வாங்கி விட்டது, நல்ல சந்தர்ப்பங்களை சரியாக கையாளும் தன்மை இன்மையே, மிகப்பெரும் அழிவுக்கு காரணமாக அமைந்து விட்டது,====================================