சிறிலங்கா அதிபரின் நாடாளுமன்ற உரைக்கு இந்தியா பாராட்டு – நேரில் தெரிவித்தார் ஜெய்சங்கர்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை இந்தியா பாராட்டியுள்ளது. இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேசிய போது, இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, ஒரு ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்துள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார் இந்திய வெளிவிவகாரச் செயலர்.
தேசிய நல்லிணக்கத்தை நோக்கிய சிறிலங்கா அதிபரின் அணுகுமுறையை மிகவும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, அடுத்த மாதம் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்திக்க தாம் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பொருளாதார அபிவிருத்தி, புனர்வாழ்வு, மீள்குடியமர்வு, தொடருந்து, சக்தி, மற்றும் பலாலி விமான நிலைய விரிவாக்கம், காங்கேசன்துறை துறைமுக விரிவாக்கம் போன்றவற்றுக்கு இந்தியா அளித்துள்ள உதவிகளுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
தலைவர்களின் கிரமமான பயணம், இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு மட்டுமன்றி, சில ஊடகங்களின் தவறான தகவல்களையும் மறைக்கவும் உதவும் என்றும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.