இன்று கொழும்பு வருகிறார் ஸ்வைர் – தேசிய பொங்கல் விழாவிலும் பங்கேற்கிறார்
பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர் இன்று சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக வரவுள்ளார்.
இன்று காலை கொழும்பு வரும் பிரித்தானிய அமைச்சர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
அத்துடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சட்டம் ஒழங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட சிறிலங்கா அமைச்சர்களையும் ஹியூகோ ஸ்வைர் சந்தித்துப் பேசவுள்ளார்.
யாழ்ப்பாணத்தில், உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பலாலி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள பொங்கல் விழா வழிபாடு மற்றும் அதையடுத்து நடக்கவுள்ள தேசிய பொங்கல் விழா நிகழ்வுகளிலும், பிரித்தானிய அமைச்சர் ஸ்வைர் பங்கேற்கிறார்.
இந்த தேசிய பொங்கல் விழாவில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்லும் போது, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், பிரித்தானிய அமைச்சர் சந்திக்கவுள்ளார். வரும் 16ஆம் நாள் வரை இவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹியூகோ ஸ்வைர் சிறிலங்காவுக்குப் பயயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.