வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் பிரபாகரன் – கோபாலகிருஷ்ண காந்தி
பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார், அவரது கொள்கைகள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறிய போதிலும், மறைந்து விடவில்லை என்று முன்னாள் இந்திய இராஜதந்திரியான கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜி ஆகியோரின் பேரனும், சிறிலங்கா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளுக்கான இந்தியத் தூதுவராக பணியாற்றியவருமான கோபாலகிருஷ்ண காந்தி கொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடந்த நிகழ்வில் தலைமையுரையாற்றிய கோபாலகிருஷ்ண காந்தி தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது.-
“சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் வரலாற்றில் நினைவு கூரப்படுவார்.
ஆனால் போரின்போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை மறைக்க முடியாது.
பிரபாகரனின் குழந்தை என்பதற்காக கொடிய முறையில், ஒரு குழந்தை கொல்லப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தை பயங்கரமான முறையில் இந்த உலகத்தை விட்டு சென்றுள்ளது.
போரில் பெற்ற வெற்றியின் மூலம் துப்பாக்கிகள் மௌனமாகிய அதேவேளை, சமாதானப் பேச்சுக்களும் தமது குரல்களை இழந்தன.
பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார். அவரது குறிக்கோள் என்னவானது?
பிரபாகரனின் குறிக்கோளும் அவருடன் வரலாறாகி விட்டதா? அல்லது மீண்டும் தலையெழுப்பதற்காக மறைந்திருக்கிறதா?
பிரிவினைவாதக் கொள்கைகள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இல்லாதிருக்கலாம்.
அது நீண்ட ஆயுளைக் கொண்டது. அந்தக் கொதிப்புணர்வு மறைந்து போய்விடவில்லை.
சிங்கள, தமிழ் இனவாதங்களை நான் எதிர்க்கிறேன். அனைத்து சமூகத்தவர்களுக்கும் நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தற்போதைய ஆட்சியின் கீழ் இலங்கை நல்லிணக்க நாடாக மாறும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.