சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் சீனர்களின் ஆதிக்கம் வலுக்கிறது
சிறிலங்காவின் சுற்றுலாச் சந்தையில் இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளில் சீனர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
சிறிலங்காவுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு, 1,798,380 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக, சிறிலங்காவின் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது முன்னைய ஆண்டை விட 17.8 வீத அதிகரிப்பாகும். 2014ஆம் ஆண்டு, 1,527,153 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்கு வந்திருந்தனர்.
அதேவேளை, 2014ஆம் ஆண்டை விட, 2015ஆம் ஆண்டு இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை, 30.3 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து கடந்த ஆண்டு 316,247 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா வந்துள்ளனர்.
2015ஆம் ஆண்டில், சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை, 67.6 வீதத்தினால் அதிகரித்துள்ளது. 2014ஆம் ஆண்டில், சீனாவில் இருந்து 128,166 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில் கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை, 214,783 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்காவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்களில் மூன்றாவது இடத்தை பிரித்தானியர்கள் பிடித்துள்ளனர். அங்கிருந்து 161,845 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர் என்பதுடன், இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில்,12.3 வீதம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.