மைத்திரியின் வாக்குறுதியை வரவேற்கிறது கூட்டமைப்பு
இடம்பெயர்ந்துள்ள ஒரு இலட்சம் மக்கள் ஆறு மாதங்களுக்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படுவர் என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதி சாதகமானதொரு முன்னேற்றம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஏஎவ்பியிடம் கருத்து வெளியிடுகையில்,
“சிறிலங்கா அதிபர் முதல் தடவையாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு காலஅட்டவணை ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு சாதகமான முன்னேற்றம். இதனை நாம் வரவேற்கிறோம்.
ஆனால், சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ள தனியார் காணிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஏஎவ்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்திருந்த செவ்வியில், போரினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.