மேலும்

விக்னேஸ்வரனின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி

Siva-Pasupathyதமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார்.

சிவா பசுபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதி தனிப்பட்ட பயணமாக நேற்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.

தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உபகுழுவில் தனது பிரதிநிதியாக பங்கேற்கும்படி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தொலைபேசி மூலம் சிவா பசுபதியிடம், வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால்,சிறிலங்காவுக்குள் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க தீர்வு ஒன்றைக் காணும் முயற்சிகள் தீவிரமாக இடம்பெறும் போது, தமிழ் மக்கள் பேரவை போன்று தனியானதொரு உருவாக்கம் பொருத்தமற்றது என்று தாம் நினைப்பதாக, முதலமைச்சரிடம் சிவா பசுபதி வெளிப்படையாக கூறிவிட்டார்.

இந்த நேரத்தில் தமிழர்களின் ஒற்றுமையே அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விக்னேஸ்வரன் விடாப்படியாக அவரை வலியுறுத்திய போதிலும், சிவாபசுபதி தனது முடிவில் தளரவில்லை.

இறுதியாக விக்னேஸ்வரன் கோபத்துடன் தொலைபேசியை வைத்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவா பசுபதியின் இந்த முடிவு விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவா பசுபதி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ள மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிட்டிருந்தார் என்றும், அரசியல் நோக்கமற்ற, முற்றிலும் தனிப்பட்ட பயணமாகவே வந்திருந்தார் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *