விசாரணையைத் தவிர்க்க அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றாரா சுசில் பிரேமஜெயந்த?
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது, இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்கும், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட, முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த திடீரென அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், பெற்றோலியக் கொள்வனவில் இடம்பெற்றதாக கூறப்படும் மில்லியன் கணக்கான ரூபா மோசடி குறித்து நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அந்தக் காலகட்டத்தில், சக்தி, மின்வலு அமைச்சராக இருந்தவர் சுசில் பிரேமஜெயந்த.
இந்த மோசடி குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அவர் கடந்த வியாழக்கிழமை திடீரென, அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
கொழும்பில் அமைச்சர்கள் நியமனம் தொடர்பான இழுபறிகள் நடந்து கொண்டிருந்த சூழலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டு அவர் அமெரிக்கா சென்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வோசிங்டனில் உள்ள டல்லஸ் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை சுசில் பிரேமஜெயந்த வந்திறங்கிய படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வசிப்பதற்கான கிறீன் அட்டையை புதுப்பிப்பதற்காகவே, அவர் அங்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட அவர், வரும் 1ஆம் நாள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், அமெரிக்காவுக்குச் சென்றிருப்பது, அரசியல் வட்டாரங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.