ஜெனிவா அமர்வுக்கு முன்னர் மூன்று முக்கிய அறிக்கைகளை தயார்படுத்துகிறது சிறிலங்கா
ஜெனிவாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர், மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போகச்செய்யப்பட்டது, ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளே ஜெனிவா அமர்வுக்கு முன்னதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
தற்போது துரித கதியில் மேற்கொள்ளப்படும் இந்த மூன்று சம்பவங்கள் தொடர்பாக விசாரணை அறிக்கைகளும், செப்ரெபம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும்.
இந்த விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதன் மூலம், ஜெனிவாவில் சிறிலங்காவின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்படும் போது, அழுத்தங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறிலங்காவின் முன்னைய அரசாங்கம், போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுதொடர்பாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு, அனைத்துலக சமூகம் கடுமையான அழுத்தங்களைக் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.