கதிர்காமர் கொலை குறித்து புதிய விசாரணை – குடும்பத்தினர் கோரிக்கை
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக, புதிய விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கதிர்காமரின் மகள் அஜிதா மற்றும் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கவுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் துப்பாக்கிதாரி ஒருவரால், 2005 ஓகஸ்ட் 12ஆம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டார்.
கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு செவ்வி அளித்துள்ள லக்ஸ்மன் கதிர்காமரின் மகன் அஜிதா கதிர்காமர், தமது தந்தையின் படுகொலை தொடர்பாக விரிவான புதிய விசாரணையை ஆரம்பிக்குமாறு புதிய அரசாங்கத்திடம் கோருவதற்கு தமது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக அனைத்துலக அளவில் பரப்புரைகளை மேற்கொண்டு, பல்வேறு நாடுகளில் புலிகள் இயக்கத்தை தடை செய்வதற்கு காரணமாக இருந்தவர் என்பதால், அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
எனினும், எல்லாவற்றுக்கும் விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டி விடுவது இலகுவானது.
இதில் வேறு காரணிகளும் தொடர்புபட்டிருக்கலாம். கொலைக்கான உத்தரவு எங்கிருந்த வந்தது என்ற கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
கடந்த பத்தாண்டுகளில் நடந்த பல கொலைகள், சம்பவங்கள் தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடத்தப்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வலிகாமம் வடக்கில் கதிர்காமரின் குடும்பத்துக்குச் சொந்தமான காணிகள் முன்னைய அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டது குறித்தும் அஜிதா கதிர்காமர் விசனம் வெளியிட்டுள்ளார்.
காணிகள் தொடர்பான சட்டரீதியான ஆவணங்கள் அனைத்தும் எம்மிடம் உள்ள போது, அவை கதிர்காமர் குடும்பத்துக்குச் சொந்தமானவை என்று தமக்குத் தெரியாதென எவரேனும் எப்படிக் கூற முடியும்,
இப்போது எமது குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் அதிபர் மாளிகையாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.