பிரகீத் கடத்தல்: கைதான 4 இராணுவ அதிகாரிகளுக்கும் 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளையும் 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க, குற்றப்புலனாய்வுப் பிரிவு அனுமதியைப் பெற்றுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போன நேரத்தில் இவர்கள் கிரிதல இராணுவ முகாமில் பணியாற்றிவர்கள் என்றும், அதுதொடர்பாக விசாரிக்கவே 48 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், குற்றப்புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா காவல்துறை மா அதிபரின் உத்தரவின் பேரில் உயர் மட்ட காவல் துறை அதிகாரிகள் குழுவொன்று இவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
லெப்.கேணல் குமார ரத்நாயக்க, லெப்.கேணல் சிறிவர்த்தன மற்றும் ஸ்ராவ் சார்ஜன்ட் ராஜபக்ச, கோப்ரல் ஜெயலத் ஆகிய நான்கு இராணுவ அதிகாரிகளும், நேற்றுமுன்தினம் விசாரணைகளுக்கான குற்றப்புலனாய்வுப் பிரிவின் முன்பாக சரணடைந்தனர்.
நேற்று முன்தினம் நண்பகல் தொடக்கம் மாலை 5 மணிவரை நடத்திய விசாரணையை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை கைது செய்வதற்கு இராணுவத் தளபதியும், பாதுகாப்புச் செயலரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அதேவேளை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக ஏற்கனவே, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட இரண்டு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும், ஓய்வு பெற்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.