புதிய அமைச்சரவையில் 51 அமைச்சர்கள்?
புதிதாக அமையவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐதேகவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பேச்சுக்களில் இன்னமும் இழுபறிகள் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இழுபறிகளால் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரிக்கும் என்ற கூறப்படுகிறது.
ஐதேகவைச் சேர்ந்த 33 பேரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 18 பேரும் அமைச்சர்களாக வாய்ப்புள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 40 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களில் 22 பேர் ஐதேகவையும், 18 பேர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் சேர்ந்தவர்களாவர்.
அமைச்சரவையின் முதல் கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அத்துடன், மீண்டும் மாவட்ட அமைச்சர் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதேவேளை, நாளை முதற்கட்டமாக பெரும்பாலும் ஐதேகவினரைக் கொண்ட 30 அமைச்சர்கள் பதவியேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம் வரும் செப்ரெம்பர் முதலாம் நாள் கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.