மகிந்த அணியினரைக் களையெடுக்கும் மைத்திரி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில், மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களைக் களையெடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் இருந்து எஸ்.எம்.சந்திரசேன, குமார வெல்கம மற்றும் பவிரத்ரா வன்னியாராச்சி ஆகியோர் நீக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இவர்கள் மூவரும், மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளர்கள் என்பதுடன், நேற்றுமுன்தினம் நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவின் மற்றொரு தீவிர ஆதரவாளரான ரி.பி.எக்கநாயக்கவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பதில் செயலர் விஸ்வ வர்ணபால மற்றும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க ஆகியோர் தமக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக, ரி.பி.எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.