வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் – ரணிலிடம் தொலைபேசியில் பான் கீ மூன்
சிறிலங்காவில் நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
நேற்று சிறிலங்கா பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வாழ்த்து தெரிவித்தார்.
இதன் போது அவர், சிறிலங்காவில் அமைதியாகவும், அதிகபட்ச வாக்காளர்களின் பங்கேற்புடனும் தேர்தல் நடத்தப்பட்டதற்கு பான் கீ மூன் பாராட்டுத் தெரிவித்தார்.
சிறிலங்கா பிரதமரும், தேசிய அரசாங்கமும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மக்களுக்கு உதவ ஐ.நா கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ருவிட்டரில் வாழ்த்திய நரேந்திர மோடி
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவிட்டரில் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்வதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்கவுடன் தொலைபேசியில் வாழ்த்துக் கூறியிருந்தார். அதுபற்றி தனது ருவிட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள், மேலும் பலமடையும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிறிலங்காவுடன் இணைந்து செயற்படத் தயார் – சீனப் பிரதமர்
சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவதற்கு சீனா தயாராக இருப்பதாக, சீனப் பிரதமர் லி கெகியாங் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்து அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவும், சீனாவும், எப்போதும், நல்ல நண்பர்கள், பங்காளிகள். அண்மைய ஆண்டுகளில் இரு நாடுகளின் மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் பல்வேறு வகைகளிலும் ஆழமான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.
இருநாடுகளின் அடிப்படை நலன்கள் தொடர்பாக சிறிலங்காவும் சீனாவும், நட்புறவு ஒத்துழைப்பை பேணுவதுடன், இருநாட்டு மக்களும் பொதுவான அபிலாசைகளையும் கொண்டுள்ளனர்.
சிறிலங்காவுடனான உறவுக்கு சீன அரசாங்கம் மிகப் பெரிய முக்கியத்துவத்தை அளிக்கிறது.
இருதரப்பு மூலோபாயப் பங்காளர் உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.