யாழ். மாவட்டத்தில் கூட்டமைப்பு முன்னணியில் – தீவகத்திலும் ஆதிக்கம்
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நேற்று நடந்த தேர்தலில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இது வரை எணணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி, ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, மானிப்பாய், கோப்பாய், யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை 1 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடுமையான போட்டியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இருக்கும் என்று கூறப்பட்ட போதிலும், தற்போதைய நிலையில், 17 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ஈபிடிபி இரண்டாமிடத்தில் உள்ளது.
அதையடுத்து ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
எனினும் அதிகாரபூர்வமான எந்த முடிவும் இன்னமும் வெளியிடப்படவில்லை.