தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் நாளை நள்ளிரவு முதல் வெளியாகும்
சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நாளை நடக்கவுள்ள தேர்தலின் தொகுதி மட்டத்திலான முடிவுகள், நாளை நள்ளிரவுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
“நாளை பிற்பகல் 4 மணியளவில் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர்,அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.
எனினும், வாக்களிப்பு நிலையங்களில் பதிவான வாக்குகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வந்து சேர்ந்ததும், நாளை இரவு 9 மணியளவில், வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்படும்.
முதலில் தேர்தல் தொகுதி ரீதியான முடிவுகள் வெளியிடப்படும். அதையடுத்து, மாவட்ட ரீதியான முடிவுகளும், இறுதியில் தேசிய அளவிலான முடிவுகளும் அறிவிக்கப்படும்.
நாளை மறுநாள் நண்பகல் அளவில், இறுதியான தேசிய மட்ட முடிவுகள் வெளியிடப்படும்.
அதன் பின்னர், நாளை மறுநாள் இரவு, விருப்பு வாக்குகளின் விபரங்கள் வெளியிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.