மேலும்

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு

murugan-santhan-aruvuராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை  எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது.

இந்தநிலையில் அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையென மத்திய அரசு கருதுகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அப்படி தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையென்று கருதினால் அதனை தமிழ்நாடு அரசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த கருத்தை தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் எனவும், உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும் மாநில அரசுகளின் உத்தரவை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் வாதிட்ட, இந்திய மத்திய அரசின் சட்டவாளர், ரஞ்சித் குமார் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக உள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு செயற்படவில்லை என்றும், தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சட்டவாளர் நாளைக்குள் வாதத்தை முடிக்க வேண்டும் என்றும், வாதத்தை தொடர்ந்து நீடிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, இந்த வழக்கில் இன்று முருகன் தரப்பில் முன்னிலையான, சட்டவாளர் ராம் ஜெத்மலானி, ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தனது வாதத்தை முன் வைத்தார்.

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன் உச்சநீதிமன்றத்தின் கடமை முடிந்து விட்டது. ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது பற்றி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உள்ளன.

தமிழ்நாடு சிறைத்துறை விதிமுறைகளின்படி தான் 7 பேரையும் விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று ராம் ஜெத்மலானி வாதிட்டார்.

இந்த வாதங்களை அடுத்து. வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *