கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா
மீரிஹானவில் கைப்பற்றப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய வெள்ளை வான் தொடர்பான விசாரணைகளில் சிக்கியுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இலக்கத் தகடு மாற்றப்பட்ட வெள்ளை வான் ஒன்றை மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்பு பிரிவினர் பயன்படுத்திய போது, மீரிஹானவில் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.
அதிலிருந்து மெய்ப்பாதுகாவலர்களிடம், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் தனிப்பட்ட பாவனைக்கான கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கு எதிராக- சிறிலங்கா இராணுவ காவல்துறையும், புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடத்தி வருகின்றன.
இந்த நிலையிலேயே அவர் கொமாண்டோ படைப்பிரிவின் தளபதி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் புதிய தளபதியாக, பிரிகேடியர் ரால்ப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எதிர்வரும் 19ஆம் நாள் தனது பதவியைப் பொறுப்பேற்றுக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.