நிமால் சிறிபால டி சில்வாவுக்கு பிரதிப் பிரதமர் பதவி?
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக முக்கியமான அரசியல் பிரமுகர் ஒருவர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவிருப்பதாக, கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த திங்கட்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள முக்கிய பிரமுகரே அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளார்.
தாம் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்புவதாக இவர் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பிரமுகர் யார் என்பது குறித்து அந்த ஊடகம் தகவல் வெளியிடவில்லை.
எனினும், அரசுடன் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளவர், நிமால் சிறிபால டி சில்வாவாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளியாகியுள்ளன.
அவ்வாறு அவர் இணைந்து கொண்டால், புதிய அரசாங்கத்தில் பிரதிப் பிரதமர் பதவி அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.