வாகனங்களைப் பயன்படுத்த சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு
மீரிஹானவில் சிறிலங்கா இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த வெள்ளை வான் ஒன்று காவல்துறையினரிடம் அகப்பட்டதை அடுத்து, பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவி நிலைகளில் உள்ள அதிகாரிகள் தமது அதிகாரபூர்வ வாகனங்களிலோ. வாகனத் தொடரணியிலோ பொதுமக்கள் பயன்படுத்தும் இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தக் கூடாது.
குறிப்பிட்ட அதிகாரிகள் தமது வதிவிடத்தை அடைந்த பின்னர், தமது வாகனத்தை அருகிலுள்ள இராணுவ முகாமுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
அருகில் இராணுவ முகாம் எதுவும் இல்லாது போனால், காவல்நிலையத்தில் குறிப்பிட்ட வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றும் சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.