நேற்று மட்டும் செம்மணிப் புதைகுழியில் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மட்டும் 15 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 49வது நாள் அகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 5 குழந்தைகளுடைய எலும்புக்கூடுகள் உட்பட 15 எலும்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், எலும்புக் கூடொன்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்தும், ஒரு ரூபாய் நாணய குற்றியும் மீட்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புதைகுழிக்கு அருகில் எழுமாறாக தோண்டப்பட்ட இரு சோதனைக்குழிகளில் இருந்தும், எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை 103 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 539 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 524 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

