ஐதேக செயற்குழு கூட்டத்தில் குழப்பம் – கூட்டணியை உருவாக்குவதில் சர்ச்சை
வரும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கும் நோக்கில் நேற்று கூட்டப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மூன்று மணித்தியாலங்கள் நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, கூட்டணியை அமைக்கும் யோசனையை வாக்கெடுப்புக்கு விட தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது, இந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக சில உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், வாக்கெடுப்பில் 35 செயற்குழு உறுப்பினர்கள் ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்க ஆதரவு அளித்தனர் என்றும், 7 பேர் எதிர்த்து வாக்களித்தனர் என்றும் கூறினார்.
எனவே, புதிய கூட்டணியை உருவாக்கும் பணிகள் தொடரும் என்றும், வரும் 5ஆம் நாள் அதனை உருவாக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் கூறினார்.
எனினும், கூட்டணிக்காக முன்மொழியப்பட்ட யாப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று பல உறுப்பினர்கள் கோரியதால், அதற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மற்றொரு ஐதேக மூத்த உறுப்பினர் தகவல் வெளியிடுகையில், கூட்டணியின் யாப்புக்கு திருத்தங்களுடன் அங்கீகாரம் அளிக்கப்பட்டதாக கூறினார்.
எனினும், செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் பேசிய அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. புதிய கூட்டணியின் பொதுச்செயலர் நியமனம், முடிவெடுக்கும் செயல்முறைகள், கூட்டணியின் செயலக முகவரி, உள்ளிட்ட பல விடயங்களில் எதிர்ப்புகள் எழுப்பப்பட்டன என்று தெரிவித்தார்.
பொதுச்செயலராக ஐதேக உறுப்பினர் ஒருவரே இருக்க வேண்டும் என்றும், இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது,
அதேவேளை, வரும் 5ஆம் நாள் கூட்டணியின் உடன்பாடு கையெழுத்திடப்படுவதற்கும் சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்த உடன்பாட்டில் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்பதே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்தாக இருந்தது. அதுவே, வாக்கெடுப்பு நடத்தும் முடிவை அவர் எடுப்பதற்கு காரணமாக அமைந்தது.
எனினும், வாக்கெடுப்பு நடத்தும் முடிவை, யாப்பை எதிர்த்தவர்கள் நிராகரித்தனர் என்றும் அறியப்படுகிறது.
புதிய கூட்டணியின் யாப்புக்கு ஆதரவாக வும் எதிராகவும், ஐதேக செயற்குழு இரண்டாக பிளவுபட்டிருந்தது.
ரணில் விக்ரமசிங்கவுடன் அவருக்கு ஆதரவாக, நவீன் திசநாயக்க, ஜோன் அமரதுங்க உள்ளிட்டவர்கள் இருந்தனர்.
அதேவேளை கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்கள் கபீர் காசிம், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, ரவி சமரவீர, சுஜீவ சேனசிங்க, அஜித் பெரேரா, ஏரான் விக்ரமரத்ன, டிலிப் வேதாராச்சி, நளின் பண்டார, போன்றோர் கூட்டணியின் யாப்புக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர்.