சிக்கலான விடயங்களைப் பிற்போடுவதற்கு சம்பந்தன்- விக்கி சந்திப்பில் இணக்கம்
சிக்கலை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்களை தள்ளிப் போடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் முடிவு செய்துள்ளனர். கொழும்பில் நேற்று நடந்த சந்திப்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையில் கடந்த மாதம் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, இரா.சம்பந்தனும், சி.வி.விக்னேஸ்வரனும் சந்தித்துப் பேச முடிவெடுத்திருந்தனர். இதற்கமைய, கொழும்பில் நேற்றுக்காலை இருவரும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், ‘இரா.சம்பந்தனுடனான சந்திப்பின் போது, மற்றைய விடயங்களுடன் வடக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைமையும் பரிசீலிக்கப்பட்டது.
அங்கு எழுந்துள்ள நிலைமை பற்றி முடிவுகளை எடுக்க முன்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எல்லா கட்சித் தலைவர்களுடனும் பேச வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், எல்லாக் கட்சித் தலைவர்களையும் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதுவரையில் வடக்கு மாகாண சபையில் முன்மொழியப்பட்ட பிரேரணைகள் உட்பட சபையில் எழும் ஏனைய முரண்பாட்டுக்கு அமைவதான கருமங்கள் பிற்போடப்படுவது அவசியம் என்றும் இணக்கம் காணப்பட்டது’ என்று கூறப்பட்டுள்ளது.