இரண்டு வாரங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பறிபோகும் – எச்சரிக்கிறது மகிந்த அணி
சிறிலங்கா அரசாங்கம் இன்னும் இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் என்று கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தற்போது நடப்பது ஐதேகவின் ஆட்சி தான். எனவே இதில் அங்கம் வகிக்கின்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும்.
நாடு எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்கின்ற ஆற்றலை இந்த அரசாங்கம் இழந்து விட்டது.
இத்தகைய அரசாங்கத்தில் பதவி வகிப்பது பயனற்றது. எனவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தை விட்டு விலகி எம்முடன் இணைய வேண்டும்.
எல்லோரும் எம்முடன் இணைவார்கள் என்று நான் எண்ணவில்லை. ஆனால் இணைய விரும்புபவர்களை நாம் வரவேற்கிறோம்” என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தினேஸ் குணவர்த்தன, “சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சமஸ்டி ஆட்சிமுறையைக் கொண்டு வர முனைகிறது என்று குற்றம்சாட்டினார்.
அத்துடன், கூட்டு எதிரணிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அது பொய்யான செய்தி. ஊடகங்கள் இதனை பெரிய எழுத்துக்களில் வெளியிடக் கூடாது.
கூட்டு எதிரணிக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் தனித்துச் செயற்பட முடிவு செய்யவில்லை” என்றும் கூறியுள்ளார்.