இந்தியா அனுப்பிய மூன்றாவது உதவிக் கப்பலும் கொழும்பு வந்தது
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு உதவிப்பொருட்களை ஏற்றிக் கொண்டு மூன்றாவது இந்தியக் கடற்படைக் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று கப்பல்களில் இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியிருந்தது. ஐஎன்எஸ் கிரிச் கடந்த சனிக்கிழமையும், ஐஎன்எஸ் சர்துல் ஞாயிற்றுக்கிழமையும் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்திருந்தன.
இந்தநிலையில், இன்று மூன்றாவது கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வாவில் உதவிப் பொருட்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.
கப்பலில் எடுத்து வரப்பட்ட உதவிப் பொருட்களை இந்தியத் தூதுவர் தரன்ஜித்சிங் சந்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, சிறிலங்கா அதிபரின் செயலர் மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரிடம் கையளித்தார்.
இந்தியா அனுப்பியுள்ள மூன்றாவது கப்பலிலும் மருத்துவ மற்றும் மீட்புக் குழுக்களும் கொழும்பு வந்துள்ளன.