திருகோணமலைத் துறைமுகத்தில் அவுஸ்ரேலிய ரோந்துக் கப்பல்
அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் பாரிய ரோந்துக் கப்பலான “ஓசன் ஷீல்ட்” திருகோணமலைத் துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.
அவுஸ்ரேலிய எல்லை காவல்படையின் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.
மனித கடத்தல், சட்டவிரோத மீன்பிடி, நாடுகடந்த குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் ஆழ்கடலில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மனித கடத்தலைத் தடுப்பதற்கு சிறிலங்கா மிகுந்த ஆதரவை அளித்து வருவதாக இந்தக் கப்பலுடன் வந்துள்ள அவுஸ்ரேலிய எல்லை நடவடிக்கை தளபதி எயர் வைஸ் மார்ஷல் ஸ்டீபன் ஒஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பலின் பயணம், சிறிலங்காவுடனான எமது வலுவான உறவுகளை பலப்படுத்திக் கொள்வதற்கும் பரந்துபட்ட கடல்சார் கரிசனைகள் தொடர்பாக எமது ஒத்துழைப்பையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.