வெள்ளைக்கொடி விவகாரத்தில் என்னைச் சிக்கவைக்க முனைகிறார் பொன்சேகா – கோத்தா
வெள்ளைக் கொடி விவகாரத்தில் தன்னை குற்றவாளியாக்குவதற்கு, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
முன்னைய ஆட்சிக்காலத்தில் ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து, பாரிய ஊழல்கள், மோசடிகள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் அளிக்க நேற்று வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக உண்மையைக் கண்டறிய வேண்டும். முறையான சட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே போரை முன்னெடுத்தோம். போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கிறார்.
அவர் இத்தகைய கருத்துக்களை முன்வைப்பது புதிய விடயமல்ல, அவர் முன்னர் அமெரிக்கா சென்றிருந்த போதும், இதனையே வலியுறுத்தியிருந்தார்.
வெள்ளைக் கொடி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, சரத் பொன்சேகா என்னை குற்றவாளியாக சித்திரிக்கவே, உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் இவ்வாறு கூறி வருகிறார்.
வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு முன்னதாக, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.