வலிகாமத்தில் 700 ஏக்கர் காணிகள் இன்று இராணுவப் பிடியில் இருந்து விடுவிப்பு
வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில், உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள 700 ஏக்கர் காணிகள் இன்று சிறிலங்கா படையினரின் பிடியில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன. இன்று யாழ்ப்பாணம் செல்லும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இந்தக் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவுள்ளார்.
தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளில் உள்ள காணிகளே இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
12 கிராம அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த 620 குடும்பங்களின் காணிகளே இன்று சிறிலங்கா அதிபரால் இன்று மீள கையளிக்கப்படவுள்ளன.
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை, நடேஸ்வரா கல்லூரி, நடேஸ்வரா கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றையும், கல்விச் செயற்பாடுகளுக்காக சிறிலங்கா அதிபர் இன்று ஒப்படைக்கவுள்ளார்.
இன்று மீளக்கையளிக்கப்படவுள்ள 700 ஏக்கர் காணிகளில், 200 ஏக்கர் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்டதாகும்.