எட்காவை எதிர்க்கும் மகிந்த அணியை சாடிய இந்தியத் தூதுவர்
இந்தியா- சிறிலங்கா இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டுக்கு, (எட்கா) சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி எதிர்ப்பு வெளியிடுவது குறித்து, இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா ஆச்சரியமும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளார்.
எட்கா உடன்பாட்டுக்கு, எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட கருத்தரங்கில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் இந்தியத் தூதுவர் உரையாற்றிய போது யாரையும் பெயர் குறிப்பிட்டு உரையாற்றாத போதிலும், சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை தெளிவாக வெளிப்படுத்தும் வகையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
சட்டத்துறைப் பேராசிரியர் ஒருவர் என்று குறிப்பிட்டு சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர், ஜி.எல்.பீரிசையும், இந்தியத் தூதுவர் கடுமையாக விமர்சித்தார்.
பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக இருந்த போது, இந்த உடன்பாட்டுக்கு இணக்கம் தெரிவித்தார் என்றும் தற்போது அவர் அதனை எதிர்ப்பதாகவும், வை.கே.சின்ஹா சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும், முன்னர் இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும், தற்போது அதனை எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.