ரணிலின் சீனப் பயணத்தின் போது துறைமுக நகரத் திட்டம் குறித்த அறிவிப்பு
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கி்ரமசிங்கவின் சீனப் பயணத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் சிறிலங்காவில் பதவிக்கு வந்த பின்னர், சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட கொழும்புத் துறைநகரத் திட்டப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவுள்ளது.
எனினும், இந்த திட்டம் தொடர்பான உடன்பாட்டில் சிறிய மாற்றங்களைச் செய்ய சிறிலங்கதா அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
இதுகுறித்துப் பேச்சு நடத்த, சிறிலங்காவின் அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரமவும், சாகல இரத்நாயக்கவும், சீனா சென்று திரும்பியுள்ளனர்.
சிறிலங்கா அமைச்சர்களுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக வர்த்தக திணைக்களத்தின் அமைச்சர் சொங் டாவோ, உதவி அமைச்சர் செங் பெங்சியாங் ஆகியோடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் ஆக்கபூர்வமானதாக இருந்தது என்று அதிகாரபூரவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையடுத்தே, கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீள ஆரம்பிப்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க அடுத்தமாதம் முதல் வாரத்தில் சீனாவுக்கு மே்றகொள்ளும் பயணத்தின் போது, முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.