இராணுவ தேவைக்காக சிறிலங்கா துறைமுகங்களை கோரும் நாடுகள்
சிறிலங்காவின் துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி கோரியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு போரின் பின்விளைவுகள் குறித்துசிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இத்தகைய சூழ்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மைய நிகழ்வுகள் குறித்து அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட வேண்டும்.
மத்திய கிழக்கு போரில் சனிக்கிழமை இணைந்த யேமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடாவை செங்கடலுடன் இணைக்கும் குறுகிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மன்டாப் நீரிணையை மூடுவதாக விடுத்த அச்சுறுத்தல் சிறிலங்காவை நேரடியாகப் பாதிக்கக் கூடும்.
இந்த நீரிணை ஆண்டுதோறும் 25,000 கப்பல்கள் கடந்து செல்லும் ஒரு வர்த்தகப் பாதையாகும்.
கப்பல்கள் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் கடல்வழி மாற்றம் ஏற்பட்டால், சிறிலங்கா துறைமுகங்களும் பாதிக்கப்படலாம்.
இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், இந்தியப் பெருங்கடலையும் இராணுவமயமாக்க வழிவகுக்கக்கூடும்.
சில நாடுகள் சிறிலங்கா துறைமுகங்களை இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்த ஏற்கனவே அனுமதி கோரியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் அரசாங்கம் என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும், என்றும் அவர் அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
