காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த அனைத்துலக விசாரணைக்கு சிறிலங்கா எதிர்ப்பு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்பும் விசாரணை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பதாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2009-ஆம் ஆண்டுபோரின் இறுதிக் கட்டங்களில் சுமார் 2,764 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை விவாதத்திற்குரியது.
காணாமல் போனவர்கள் குறித்த துல்லியமான தரவுகள் எதுவும் இல்லை.
போரின் போது இரு தரப்பினரும் பலவந்தமாக காணாமல் ஆக்குவதில் ஈடுபட்டுள்ளனர், எனினும் அரசாங்கம் அத்தகைய செயல்களை ஆதரிக்கவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து எந்தவொரு அனைத்துலக அமைப்புகளும் விசாரிப்பதை அரசாங்கம் எதிர்க்கிறது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
