தமிழினப் படுகொலை நினைவேந்தல்- கனடியப் பிரதமர் கார்னியின் அறிக்கை
பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளை முன்னிட்டு கனடியப் பிரதமர் மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆயுதப்போர் முடிவடைந்து இன்றுடன் 16 ஆண்டுகள் ஆகிவிட்டன.
26 வருடங்களுக்கும் அதிகமாக நீடித்த இந்தப் போரில் பல பத்தாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
இந்தத் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளில், இழந்த உயிர்களையும், சிதறிப்போன குடும்பங்களையும், பேரழிவடைந்த சமூகங்களையும், இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே இருப்போரையும் நாம் நினைவுகூருகிறோம்.
அத்துடன், தமது அன்புக்குரியவர்களின் நினைவுகளைச் சுமக்கும் கனடிய தமிழ்ச் சமூகத்தையும், கனடாவின் பல பகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளையும் நாம் மனதிற் கொள்கிறோம்.
பொறுப்புக்கூறலுக்கும், உண்மை, நீதி ஆகியவற்றை அடைவதற்கும் எடுக்கப்படும் சுதந்திரமான சர்வதேச முயற்சிகளைக் கனடா தொடர்ந்தும் ஆதரிக்கிறது.
இந்த நினைவேந்தல் நாளை நாம் கடைப்பிடிக்கும்போது, துணிவுடன் அஞ்சலி செலுத்துவதற்கான உறுதிப்பாட்டையும், நீடித்திருக்கும் அமைதிக்காகச் செயற்படுவதற்கான உறுதிப்பாட்டையும் அது பலப்படுத்தட்டும். என்று அந்த அறிக்கையில் கனடியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.