மேலும்

வலி.வடக்கில் வாழ்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு அவசர அழைப்பு

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டில் இருந்து 25 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 5 ஆக, குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 கிராம அலுவலர் பிரிவுகளின் வாக்காளர்களை, வெளிநாடுகளில் இருந்தாலும் கூட, உறவினர்கள் மூலமாக பதிவு செய்து கொள்ளுமாறு  அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வுகளின் போது, மீளாய்வுக்குட்படுத்தப்படுவதில்லை.

இந்த ஆண்டும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என்று யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233), காங்கேசன்துறை மத்தி (ஜே/234), காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வருத்தலைவிளான் (ஜே/241), குரும்பசிட்டி (ஜே/242), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி வடக்கு (ஜே/249), தையிட்டி மேற்கு (ஜே/250), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/252), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.

மயிலிட்டி தெற்கு (ஜே/248), பலாலி வடமேற்கு (ஜே/255), பலாலி மேற்கு (ஜே/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்து வந்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம்  நாளுக்கு  முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் கிராம அலுவலர்கள் பணியகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தி அறிவிக்குமாறு மாவட்டத்தின் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் தேர்தல்கள் திணைக்களம் தெரியப்படுத்தியும் அது தொடர்பில் அவர்கள் அக்கறையின்றி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் இது தொடர்பான விளக்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்ட பின்னர், விண்ணப்பிக்காதவர்கள் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்படுவதற்கான அபாயம் உள்ளது.

சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் இந்தப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளில் வாக்காளர் பட்டியல்  மீளாய்வு செய்யப்படவில்லை. எனவே, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 25 ஆயிரத்தால் குறைவடைவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு குறைவடைந்தால் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின்போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 ஆசனங்களே ஒதுக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வழிமூலம் – வீரகேசரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *