4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்றனர் – மூவர் நிலை இழுபறி
சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை நேற்று மாலை ஏற்றுக் கொண்டனர்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து. கடந்த மாதம் 9 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை விட்டு விலகினர். அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொண்டனர்.
ஏனைய 7 அமைச்சர்களில் நான்கு பேர் நேற்றிரவு மீண்டும் தமது பழைய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாக பதவியேற்றனர். அமீர் அலி இராஜாங்க அமைச்சராகவும், அப்துல்லா மஹ்ரூப் பிரதி அமைச்சராகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சி்றிசேனவின் முன்னிலையில் பதவியேற்றனர்.
அதேவேளை புத்திக பத்திரனவும், நேற்று இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
எனினும், அமைச்சர் பதவிகளை விட்டு விலகிய ஹரீஸ், அலி சாஹிர் மௌலானா, பைசல் காசிம் ஆகியோர் மீண்டும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக் கொள்ளவில்லை.