மேலும்

மானிப்பாயில் துப்பாக்கிச் சூடு- வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் நேற்றிரவு சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில், வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

மானிப்பாய்- இணுவில் வீதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதிக் காவல் படையினர் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையினர், மூன்று உந்துருளிகளில் வந்த ஆறு இளைஞர்களை மறித்து சோதனையிட முற்பட்ட போது, அவர்கள் காவல்துறையினர் மீது வாள்களால் தாக்க முற்பட்டதாகவும், அதையடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இதில் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், மற்றொருவர் படுகாயம் அடைந்தார் எனவும், ஏனைய நால்வரும் தப்பியோடி விட்டனர் எனவும் சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவரின் சடலம், உந்துருளி, வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்கள் அந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டவர் சிறிலங்கா காவல்துறையினரால் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இணுவில் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா காவல்துறையினர் அந்தப் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினரை தேடிச் சென்றதாகவும், காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து மானிப்பாய் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு பதற்ற நிலை காணப்பட்டது.

கொல்லப்பட்ட இளைஞர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *