மேலும்

வன்னியைப் புரட்டிப் போட்ட வெள்ளம் – 10 ஆயிரம் பேர் பாதிப்பு

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு தொடக்கம், கொட்டிய பெருமழையைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு தொடக்கம் நேற்றுக்காலை வரை கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடும் மழை கொட்டியது.

நேற்றுக்காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், மாங்குளத்தில் அதிகபட்சமாக 365.1மி.டீ மழை பதிவாகியது. ஒட்டுசுட்டானில், 302.1 மி.மீ மழை பதிவானது.

குறுகிய நேரத்தில் அதிக மழை பொழிந்ததால், குளங்கள் நிரம்பி, வான்பாய்ந்தன.

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 39 அடியைத் தாண்டி, வான்பாயத் தொடங்கியதால், 11 வான்கதவுகளும் திறந்து விடப்பட்டன. ஆனாலும், நேற்று மாலை வரை அதன் நீர்மட்டத்தை அரை அங்குலமே குறைக்க முடிந்தது.

மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும், இரணைமடு, கனகாம்பிகைக் குளம், முத்தையன்கட்டு குளம், கல்மடு குளம், விசுவமடு குளம் உள்ளிட்ட பல குளங்கள் வான்பாய்வதாலும், அவை திறந்து விடப்பட்டதாலும், கிராமங்கள் வெள்ளத்தில் சூழ்ந்தன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் சிறிலங்கா இரணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.

இரணைமடு குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரினால் கண்டாவளை, பரந்தன், முரசுமோட்டை, புளியம்பொக்கணை,  உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கண்டாவளை பிரதேச செயலகத்துக்குள் நேற்று வெள்ளம் திடீரெனப் புகுந்ததால், கடற்படையினரின் உதவியுடன் பணியாளர்கள் மீட்கப்பட்டனர்.

தருமபுரம் மருத்துவமனைக்குள்ளேயும் வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகள், வணிக நிலையங்கள் எங்கும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. பரந்தன்- முல்லைத்தீவு வீதியை மேவி வெள்ளம் பாய்வதால் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1414 குடும்பங்களைச் சேர்ந்த 4443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் 22 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், 1347 குடும்பங்களைச் சேர்ந்த 4633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில், வவுனியா வடக்கு பிரதேசத்திலும், மன்னார் மாவட்டத்தில் மாந்தை பிரதேசத்திலும்,  பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கும் பலம் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் பணிகளில், அரச அதிகாரிகளும், தன்னார்வலர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கடும் வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒலுமடுக் குளம் மற்றும் புலுமச்சிநாதகுளம் ஆகியன உடைப்பெடுக்கும் அபாய நிலை ஏற்பட்டதை அடுத்து, சிறிலங்கா இராணுவத்தினர் குளங்களின் அணைக்கரைகளைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *